இந்தியா

உத்தரப்பிரதேச வன்முறை: கைதானவரின் வீடும் புல்டோசர் மூலம் இடிப்பு

ச. முத்துகிருஷ்ணன்

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 10-ஆம் தேதி நிகழ்ந்த வன்முறைக்கு காரணமானவர் என கருதப்படுபவரின் வீட்டை காவல்துறையினர் புல்டோசர் கொண்டு இடித்தனர்.

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி, உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது.



உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பிரயாக் ராஜில் வன்முறைக்கு காரணமானவர் எனக் கூறப்படும் ஜாவேத் அகமது என்பவரின் வீடு புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது. முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்டதற்காக ஜாவேத் அகமதுவின் வீடு இடிக்கப்பட்டதாக மாநகராட்சி உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிரயாக் ராஜில் நடைபெற்ற மோதலுக்கு ஜாவேத் அகமதுதான் காரணம் எனக் கூறி அவரை காவல் துறை கைது செய்திருந்த நிலையில் தற்போது அவரது வீடும் இடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காவல் துறையினர் மீது கல் வீசி தாக்கிய புகாருக்கு ஆளான மேலும் இருவரின் வீடும் ஷகாரன் பூரில் இடிக்கப்பட்டிருந்தது.