adipurush film, allahabad high court
adipurush film, allahabad high court twitter
இந்தியா

”குரான், பைபிள் பற்றி எடுக்க முடியுமா?” - ஆதிபுருஷ் படம் பற்றி அலகாபாத் உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

Prakash J

இராமாயண காவியத்தை மையமாக வைத்து ‘ஆதி புருஷ்’ என்கிற திரைப்படம் கடந்த ஜூன் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஓம்ராவத் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் கிருத்தி சனோன், சையீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வெளியாவதற்கு முன்பே பலவித விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் பெற்றிருந்தது. குறிப்பாக, படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் மோசமாக உள்ளதாக விமர்சித்திருந்தனர். என்றாலும் படம் ரிலீஸுக்குப் பிறகு வசூலைப் பெற்றது.

adipurush

இந்த நிலையில், ’ஆதி புருஷ்’ படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் மற்றும் காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இரண்டு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதிகள் ராஜேஷ் சிங் சவுஹான் மற்றும் ஸ்ரீபிரகாஷ் சிங் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இப்படத்தின் காட்சிகள் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சம், மத்திய தணிக்கைக் குழு விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து, படத்தை உருவாக்கியவர்களின் மனநிலை குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ”அவர்கள் குரான், பைபிள் போன்றவற்றின் வசனங்களை தொடக்கூடாது என்ற அச்ச உணர்வுடன் இருக்கிறார்கள்” என தெரிவித்தனர்.

மேலும் அவர்கள், ”சமீபகாலமாக வெளியாகி வரும் சில படங்களில் இந்து மதத்தின் கடவுள்கள் மற்றும் சாமியார்கள் கேலியாகச் சித்தரிக்கப்படுவது வழக்கமாகி உள்ளது. ஆதி புருஷ் படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கைக் குழு அனுமதியளித்தது மிகப்பெரிய தவறு; ராமாயணத்தின் மதரீதியான கதாபாத்திரங்கள் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் பலரது உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது. படத்தில் பல சர்ச்சைகளை வைத்துக்கொண்டு ’பொறுப்புத் துறப்பு பதிவிட்டிருந்தோம்’ என்று படக்குழு தரப்பு வாதிடுவது விநோதமாக இருக்கிறது.

allahabad high court

குரான், பைபிள் பற்றி ஓர் ஆவணப் படம் எடுத்துப் பாருங்கள்; என்ன நடக்கிறது என்று அப்புறம் பாருங்கள்” எனத் தெரிவித்த நீதிபதிகள், விசாரணையின்போது ஆஜராகாத தயாரிப்பாளர், இயக்குநர் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன், வரும் புதன் கிழமைக்கு இதன் அடுத்த விசாரணையை ஒத்திவைத்தனர்.