தனது மனைவியின் அந்தரங்க வீடியோக்களை அவரது அனுமதியின்றி ரகசியமாக பதிவுசெய்து, ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்ததாகவும், அந்தக் காட்சிகளை அவரது உறவினருடன் பகிர்ந்துகொண்டதாகவும் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர், அதிலிருந்து தன்னை விடுவிக்கும்படி அலகாபாத் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி வினோத் திவாகர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஃபேஸ்புக்கில் நெருக்கமான வீடியோவைப் பதிவேற்றியதன் மூலம், விண்ணப்பதாரர் திருமண உறவின் புனிதத்தன்மையை கடுமையாக மீறியுள்ளார். மேலும், வற்புறுத்தல், துஷ்பிரயேகம் அல்லது அந்தரங்க விவரங்களை சம்மதிக்காமல் பகிர்தல் ஆகியவற்றின் மூலம் மனைவியின் உரிமைகளை கட்டுப்படுத்த அல்லது மீறும் எந்தவொரு முயற்சியும் சட்டப்பூர்வமான கடுமையான மீறல்களாகும்.
திருமணம் என்பது, ஒரு கணவருக்கு உரிமையையோ அல்லது அவரது மனைவியின் மீதான கட்டுப்பாட்டையோ வழங்காது. ஆகையால் இதுபோன்ற பழைமைவாத மனநிலையை கணவன்கள் கைவிட வேண்டும். மனைவி என்பவர் கணவரின் நீட்சி அல்ல. அவருக்கும் தனிப்பட்ட உரிமைகள் உள்ளன.
அவரின் உடல் மீதான கவனிப்புக்கும் தன்னாட்சிக்கும் மதிப்பளிக்க வேண்டும். மனைவியின் தனிப்பட்ட உரிமை அளிப்பது என்பது சட்டப்பூர்வமானது மட்டுமல்ல; சமமாகக் கருதும் கணவன் - மனைவி உறவில் தார்மீகமானது” எனக் கூறி கணவரின் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.