model image freepik
இந்தியா

இனி காத்திருக்க வேண்டாம்.. அடுத்த சில மணி நேரத்தில் காசோலை பணப் பரிவர்த்தனை.. நாளை முதல் அமல்!

காசோலை தொடர்பான பணப் பரிவர்த்தனை ஒருசில மணி நேரத்தில் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு பணம் விரைவில் வழங்கும் புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Prakash J

காசோலை தொடர்பான பணப் பரிவர்த்தனை ஒருசில மணி நேரத்தில் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு பணம் விரைவில் வழங்கும் புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஒருகாலத்தில் வங்கி தொடர்பான வேலை என்றாலே அதற்காகக் காத்திருந்து முடிக்க வேண்டும். இதனால், அன்றைய நாளே ஓடிவிடும். அதுகூட, சில சமயங்களில் முடியாது; அடுத்த நாளும் வங்கிக்குச் செல்ல வேண்டிய நிலை வரலாம். ஆனால், கால மாற்றத்தில் நவீன அறிவியல் வசதிகளின் வாயிலாக இன்று உட்கார்ந்த இடத்திலேயே வங்கி தொடர்பான அனைத்துப் பணிகளையும் முடித்துவிடுகிறோம். ஏதாவது, இக்கட்டான சூழ்நிலையில் மட்டுமே வங்கியை நாட வேண்டியிருக்கிறது. அந்த வகையில், காசோலை தொடர்பான பணப் பரிவர்த்தனைக்கு கட்டாயம் வங்கிக்குச் செல்ல நேரிடுகிறது. பொதுவாக, காசோலைகளை மாற்ற ஒன்று அல்லது இரண்டு நாட்கள் அவகாசம் தேவைப்படுகிறது.

Reserve Bank of India x page

தற்போதுள்ள நடைமுறையில் வங்கிகள் ஒருநாளில் பெறப்பட்ட அனைத்துக் காசோலைகளையும் மொத்தமாகச் சோ்த்து, குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பரிவா்த்தனைக்கு அனுப்புகின்றன. இதனால், காசோலைக்கான பணம் வாடிக்கையாளா்களின் கணக்குக்கு வர ஒன்று அல்லது இரண்டு நாள்கள் ஆகின்றன. இந்த நிலையில், காசோலை தொடர்பான பணப் பரிவர்த்தனையை அடுத்த சில மணி நேரங்களில் முடிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி இதர வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தப் புதிய நடைமுறை நாளை முதல் அனைத்து வங்கிகளிலும் அமலுக்கு வர இருக்கின்றன.

இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாக அமல்படுத்தப்பட உள்ளது. அதாவது, நாளை முதல் அடுத்தாண்டு ஜனவரி 2ஆம் தேதி வரையிலான முதல்கட்டத்தில், காசோலைக்கான பணத்தை வழங்குபவரின் வங்கிகள் தங்களுக்கு சமா்ப்பிக்கப்பட்ட காசோலைகளை தினசரி மாலை 7 மணிக்குள் சரிபாா்த்து, பணம் கொடுக்கப்படுமா அல்லது மறுக்கப்படுமா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அப்படி 7 மணிக்குள் உறுதிப்படுத்தப்படாத காசோலைகள், அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்பட்டு, பணம் அனுப்பப்படும். பணம் செலுத்தும் வங்கி, அதை வாடிக்கையாளரின் கணக்கில் ஒரு மணி நேரத்துக்குள் வரவு வைக்கும்.

model image

அடுத்த ஆண்டு ஜனவரி 3ஆம் தேதியில் தொடங்கும் இரண்டாம் கட்டத்தில், காசோலைகளை உறுதிப்படுத்தும் கால அவகாசம் 3 மணி நேரமாகக் குறைக்கப்படும். அதாவது, காலை 10:00 மணி முதல் காலை 11:00 மணி வரை காசோலை பெறப்பட்டால், அது பிற்பகல் 2:00 மணிக்குள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். காலக்கெடுவிற்குள் எந்த உறுதிப்படுத்தலும் வழங்கப்படாவிட்டால், காசோலை அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும். இந்தப் புதிய நடைமுறையால் காசோலை பரிவா்த்தனை மிகவும் வேகமாகவும், எளிதாகவும் நடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. காசோலை மூலம் அடுத்த சில மணி நேரத்தில் பணம் கிடைக்கப் பெற்றால் இனி மக்கள் வங்கிகளில் காத்திருக்க வேண்டிய தேவையிருக்காது.