இந்தியா

நகைகளை திருடிவிட்டு மன்னிப்புக் கடிதம் வைத்த ’நேர்மை மிகு’ திருடன்!

நகைகளை திருடிவிட்டு மன்னிப்புக் கடிதம் வைத்த ’நேர்மை மிகு’ திருடன்!

webteam

வழக்கமாக, திருடிவிட்டு எஸ்கேப் ஆகிறவர்களைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால், சில நேர்மை மிகு திருடர்கள் நம்மை எப்படியும் ஆச்சரியப்படுத்துவார்கள் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள கருமாடி என்ற ஊரைச் சேர்ந்தவர் மதுகுமார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை கருவட்டா என்ற இடத்தில் நடக்கும் தனது அண்ணன் மகன் திருமணத்துக்காகக் குடும்பத்துடன் சென்றார். போகும் வீட்டின் முன் பக்க கேட்டை பூட்டாமல் சென்றிருந்தார். திருமணம் முடிந்து இரவு 10.30 மணியளவில் வீட்டுக்குத் திரும்பியவருக்கு அதிர்ச்சி. வீட்டின் பின்பக்கக் கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தால், பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த நகைகள் மற்றும் பணத்தைக் காணவில்லை. யாரோ திருடிச் சென்ற து தெரிந்தது. 

அதிர்ச்சி அடைந்த மதுகுமார் குடும்பத்தினர் புதன்கிழமை காலையில் இந்தத் திருட்டு பற்றி போலீசில் புகார் கொடுத்தனர். தாங்கள் சந்தேகப்படும் நபர் பற்றியும் அதில் குறிப்பிட்டிருந்தனர். போலீசார் அந்த சந்தேக நபரை கண்காணிக்கத் தொடங்கி இருந்தனர். 

இந்நிலையில் நேற்று காலை வீட்டின் கதவைத் திறந்த மதுகுமாருக்கு அதிர்ச்சி. அவர் வீட்டு வாசலில், திருடப்பட்ட தங்க நகைகள் வைக்கப்பட் டு இருந்தன. அருகிலேயே ஒரு கடிதம். மதுகுமார் அந்தக் கடிதத்தை எடுத்துப் பார்த்தார். அது மன்னிப்புக் கடிதம் என்பது தெரிந்தது. மனசாட்சி உறுத்தியதால் திருடிய நகைகளை திரும்ப வைத்தாரா, இல்லை போலீஸூக்கு பயந்து அந்த ’திருடர்’ இப்படி செய்தாரா என்பது தெரியவில்லை.

அதில், ‘ என்னை மன்னித்து விடுங்கள். பணக்கஷ்டம் காரணமாக நகைகளைத் திருடிவிட்டேன். இனி இப்படி செய்ய மாட்டேன். தயவுசெய்து எனக்கு எதிராக போலீசுக்கு செல்ல வேண்டாம்’ என்று எழுதியிருந்தது. இதையடுத்து மதுகுமார் போலீசிடம் விஷயத்தைச் சொல்லி, புகாரை வாபஸ் வாங்கிக்கொண்டார்.

திருடனாய் பார்த்து திருந்திய இந்த சம்பவம் கேரளாவில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.