சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து தேர்தல் ஆணையம் இன்று விசாரணை நடத்துகிறது.
உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் ஆளும் சமாஜ்வாதி கட்சியில் மோதல் வெடித்தது. கட்சியின் தலைவர் முலாயம் சிங்கும், அவரது மகனும் உத்தரப்பிரதேச முதலமைச்சருமான அகிலேஷ் யாதவும் தனித்தனி அணிகளாக செயல்படுகின்றனர். இருதரப்பினரும் கட்சியின் சைக்கிள் சின்னம் தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் தொடர்பாக இருதரப்பினரிடமும் இன்று தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது. முலாயம் சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோர் டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராகவுள்ளனர்.