மறைந்த அஜித் பவாரின் மனைவி சுநேத்ரா பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தவிர, பாராமதி இடைத்தேர்தலிலும் அவர் போட்டியிட உள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா மாநில துணை முதல்வருமாக இருந்த அஜித் பவார், கடந்த ஜன.28ஆம் தேதி காலை விமான விபத்தின்போது உயிரிழந்தார். உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்பான கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக புனேயில் இருந்து அவர் பாராமதிக்கு தனி விமானத்தில் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது. அஜித் பவாருடன், அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி, ஓர் உதவியாளர், விமானி-இன்-கமாண்ட் மற்றும் முதல் அதிகாரி என 5 பேரும் இதில் உயிரிழந்தனர். இந்த நிலையில், மறைந்த அஜித் பவாரின் மனைவி சுநேத்ரா பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிப்ரவரி 26,2026 அன்று மும்பையில் நடைபெற்ற கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மூத்த தலைவர்களின் ஒருமித்த முடிவின் பேரில் சுனேத்ரா பவார் கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
ஜனவரி 31 அன்று சுநேத்ரா பவார் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்மூலம் மாநில வரலாற்றில் இந்தப் பதவியை வகித்த முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். துணை முதல்வராக பதவியேற்பதற்கு முன்பு, கட்சியில் ஏற்பட்ட திடீர் தலைமை வெற்றிடத்தை நிரப்ப NCP சட்டமன்றக் கட்சியின் தலைவராக அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அஜித் பவார் எட்டு முறை எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியான பாராமதியிலிருந்து சுனேத்ரா பவார் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளார். முன்னதாக, ஷரத் பவார் வசம் இருந்த தேசியவாத காங்கிரஸை அஜித் பவார் இரண்டாக உடைத்து தனது பலத்தை உருவாக்கினார். தேசியவாத காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்ததால், அஜித் பவாரின் முகாம் கட்சியின் பெயரையும் சின்னத்தையும் தக்க வைத்துக் கொண்டது.