இந்தியா

பருத்தி தோட்டத்தில் விழுந்த பயிற்சி விமானம் - இருவர் உயிரிழப்பு

webteam

பருத்தி தோட்டத்தில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதால் இரண்டு பயிற்சி விமானிகள் உயிரிழந்தனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தின் பயிற்சி விமானம் பெகும்பேட் விமான நிலையத்தில் இன்று மதியம் புறப்பட்டது. அதில் இரண்டு பயிற்சி விமானிகள் சென்றனர். விமானம் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள பாந்த்வரம் மந்தல் பகுதியில் பறக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து, நடுவானில் சுழன்றுள்ளது. அதைத்தொடர்ந்து அங்கே இருந்த ஒரு பருத்தி தோட்டத்தில் விழுந்து நொறுங்கியுள்ளது.

இதையடுத்து அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த சில விவசாயிகள் விமானத்தின் அருகே ஓடி வந்துள்ளனர். பின்னர் விமானம் நொறுங்கியது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த காவலர்கள் இரண்டு பயிற்சி விமானிகள் உயிரிழந்திருப்பதை உறுதி செய்தனர். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.