தங்களது நிறுவனத்தை திவால் என அறிவிக்கக் கோரி தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் ஏர்செல் மனு தாக்கல் செய்துள்ளது.
ஏர்செல் ரூ.15,500 கோடி கடன் ஏற்பட்டதால் தமிழகத்தில் ஏர்செல் சேவை கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக முழுமையாக முடங்கியது. இதனால் அதன் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினார். ஆத்திர அவசரத்திற்குக் கூட மற்றவர்களை தொலைபேசியில் தொடர்புக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இந்தக் காரணத்தினால் ஏர்செல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். டவர் குத்தகை நிறுவனத்துடன் ஏற்பட்ட சட்டச் சிக்கல், நிதி நெருக்கடி காரணமாக ஏர்செல் சேவை முடங்கியதாக அதன் தென்னிந்திய தலைமை அதிகாரி சங்கர நாராயணன் அப்போது விளக்கம் அளித்திருந்தார்.
பின்னர், வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து, ஆன் செய்தால் வழக்கம் போல் தடையற்ற சேவை கிடைக்கும் எனக் கூறப்பட்டது. அதன்படி வாடிக்கையாளர்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்து பின்னர் ஆன் செய்ததையடுத்து சிக்னல் கிடைக்க ஆரம்பித்தது.
இந்நிலையில், வங்கிகளில் கடனை திரும்ப செலுத்த முடியாததால் தங்களது நிறுவனத்தை திவால் என அறிவிக்கக் கோரி மும்பையில் உள்ள தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் ஏர்செல் மனு தாக்கல் செய்துள்ளது. வங்கிகளில் பெற்ற ரூ.1500 கோடி கடனை திருப்பி செலுத்த முடியாமல் ஏர்செல் நிறுவனம் கடந்த ஒரு வருடமாக தவித்து வருகிறது. ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல், பாங்க் ஆப் பரோடா உள்ளிட்ட வங்கிகளில் இந்த கடனை ஏர்செல் பெற்றுள்ளது. மேலும், டவர் சேவை அளித்து வந்த நிறுவனங்களுக்கும் நிலுவை பாக்கி இருந்து வருவதாக ஏர்செல் நிறுவனம் தெரிவித்து இருந்தது. இத்தகைய நிலையில் ஏர்செல் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.
ஏர்செல் நிறுவனம் திவால் ஆகும் பட்சத்தில் அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.