ஏர்ஏசியா நிறுவனம் 150 ஏர்பஸ் A220-300 ரக விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது. சுமார் 19 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த முக்கிய ஒப்பந்தம், அந்நிறுவனத்தை நவீனமயமாக்கும் முயற்சியில் ஒரு பெரும் படியாகும். இந்த புதிய விமானங்கள் மேம்பட்ட எரிபொருள் சிக்கனத்தையும், குறைந்த அளவிலான கார்பன் உமிழ்வையும் வழங்குகின்றன.
ஆசியாவின் முன்னணி குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர்ஏசியா எக்ஸ், ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 150 'ஏ220' ரக விமானங்களை வாங்குவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு சுமார் 19 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹1.58 லட்சம் கோடி) ஆகும். மேலும், எதிர்காலத்தில் கூடுதலாக 150 விமானங்களை வாங்கும் உரிமையும் ஏர் ஏசியா பெற்றுள்ளது. ஏ220 ரக விமானங்களுக்கு உலகளவில் வழங்கப்பட்ட மிகப்பெரிய உறுதியான ஆர்டர் இதுவாகும்.
160 இருக்கைகள் கொண்ட புதிய வடிவமைப்பிலான ஏ220 விமானங்களைப் பயன்படுத்தும் உலகின் முதல் நிறுவனம் என்ற பெருமையை ஏர்ஏசியா பெறுகிறது. ஏர்ஏசியா தனது பழைய ஏ330 மற்றும் ஏ320 ரக விமானங்களுக்குப் பதிலாக, அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட இந்தச் சிறிய ரக விமானங்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்த விமானங்கள் பழைய மாடல்களை விட 20% குறைவான எரிபொருளையே பயன்படுத்தும். 7 மணிநேரம் வரை தொடர்ந்து பறக்கும் திறன் கொண்ட இந்த விமானங்கள் மூலம், இதுவரை விமானப் போக்குவரத்து இல்லாத சிறிய நகரங்களுக்கும் குறைந்த கட்டணத்தில் சேவையை விரிவுபடுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விமானங்கள் 2028-ம் ஆண்டு முதல் ஏர்ஏசியாவிடம் ஒப்படைக்கப்படும். இதன் மூலம் ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான விமானச் சேவைகள் மேலும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.