செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நீதித்துறையின் சேவைகளை மேம்படுத்த உதவினாலும், நீதிபதிகளின் முக்கியப் பொறுப்புகளை மாற்ற முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் கூறியுள்ளார். அவர், நீதிமன்ற நிர்வாகத்தில் சவால்கள் மற்றும் புதுமைகள் குறித்துப் பேசினார்.
உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான விக்ரம் நாத், செயற்கை நுண்ணறிவு நீதித்துறைக்கு உதவ முடியும் என்றாலும், தீர்ப்புகளை வழங்குவதில் நீதிபதிகளுக்குப் பதிலாக அதனால் செயல்பட முடியாது என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் முதல் தேசிய மாநாட்டில், ‘நீதிமன்ற நிர்வாகத்தில் சவால்கள், புதுமைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் பங்கு’ என்ற தலைப்பிலான அமர்வில் உரையாற்றிய உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத், வழக்குகளைத் தீர்மானிப்பது மற்றும் தீர்ப்புகளை எழுதுவது போன்ற முக்கியப் பொறுப்புகள் நீதிபதிகளிடமே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில் நுட்பத்தால் நீதித் துறையின் சேவைகள், திறன்களை மேம்படுத்த உதவ முடியும். ஆனால் ஏஐ, வழக்கறிஞராகவோ, நீதிபதியாகவோ செயல்பட முடியாது. ஒரு வழக்கில் 10 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டால் சூழ்நிலைகளின் அடிப்படையில் 9 பேருக்கு ஜாமீன் வழங்கி, ஒருவருக்கு ஜாமீன் மறுக்க முடியும் என்றும் கூறியுள்ளார்
நீதிமன்றங்களால் கையாளப்படும் லட்சக்கணக்கான வழக்குகளில் நிலையான தரவுத் தொகுப்பு என்று எதுவும் இருக்க முடியாது. உதாரணமாக, திருமண வழக்குகள், வணிக வழக்குகளின் தீர்வு, சமத்துவத்தை சமநிலைப்படுத்துதல் போன்றவற்றை எடுத்துக் கொண்டால், ஆவணங்களைப் படிப்பதன் மூலமும் வழக்கறிஞர்களின் வாதங்களைக் கேட்பதன் மூலமும், ஒன்றிலிருந்து மற்றொன்று உண்மையில் எவ்வாறு வேறுபடுகிறது என்பதை ஒவ்வொரு வழக்கின் நுணுக்கங்களையும் நீதிமன்றத்தால் புரிந்துகொள்ள முடியும்.
குடும்பப் பாகப்பிரிவினை வழக்குகளில் எவ்வாறு சமநிலையை ஏற்படுத்துவது என்பது நீதிபதிகளுக்கு மட்டுமே தெரியும். பல வகையான சட்டரீதியான தகராறுகளை, குறிப்பாக அரசியலமைப்பு அல்லது குற்றவியல் பிரச்னைகள் தொடர்பானவற்றை, செயற்கை நுண்ணறிவால் தீர்க்க இயலாது என்றும் நீதிபதி நாத் கூறினார்.