இந்தியா

“வங்கிகள் அதிக கடனளிப்பது சிக்கலை உண்டாக்கும்”- உர்ஜித் பட்டேல்..!

webteam

நாட்டில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வங்கிகள் அதிக கடனளித்தால் அது சிக்கலான நிலையை உருவாக்கும் என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த மே மாதம் 30ஆம் தேதி பதவியேற்றது. இந்தப் புதிய அரசின் முதல் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். கடந்த காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.8% ஆக குறைந்திருந்த நிலையில் மத்திய பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்த சில முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்திய பொருளாதார கொள்கை குறித்த மாநாட்டில் பங்கேற்ற ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் பட்டேல், இந்திய பொருளாதார தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கு வங்கிகள் அதிகளவில் கடன்களை வழங்க ஆரம்பித்தால் அது சிக்கலில் முடியும். ஏனென்றால் கடன்கள் அதிகளவில் கொடுத்தால் வங்கிகளிலுள்ள வராக்கடன்களின் எண்ணிக்கை அதிகமாகும். அதன்பின்னர் இந்த வராக்கடன்களை சமாளிக்க பொதுத்துறை வங்கிகளுக்கு அரசு நிதியளிக்கவேண்டும். இதன்மூலம் அரசின் நிதி பற்றாக்குறை அதிகரிக்கும் நிலை ஏற்படும்” எனத் தெரிவித்துள்ளார்.