இந்தியா

ஜார்கண்டை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும்... ‘ஜெய்ஸ்ரீராம்’ சொல்ல சொல்லி மதராஸா ஆசிரியர் மீது தாக்குதல்

webteam

ஜார்கண்டை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் ஜெய்ஸ்ரீராம் சொல்ல சொல்லி மதராஸா பள்ளி ஆசிரியரை ஓடும் ரயிலில் இருந்து மர்ம கும்பல் ஒன்று கீழே தள்ளியுள்ளது. 

மேற்கு வங்கம் பர்கனாஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் 26 வயதான மதராஸா பள்ளி ஆசிரியர் ஹஃபீஸ் முகமது சாருக் ஹால்டர். இவர் கடந்த வியாழக்கிழமை கேனிங்கிலிருந்து ஹூக்லிக்கு ரயிலில் பயணித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று ஹபீஸிடம் ஜெய்ஸ்ரீராம் கூறுமாறு வலியுறுத்தியுள்ளது. ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். 

இதையடுத்து அந்த கும்பல் ‘ஜெய்ஸ்ரீராம்’ கூறுமாறு ஹபீஸை சரமாரியாக தாக்கியுள்ளது. தொடர்ந்து அவர் கூற மறுத்ததால் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளப்பட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன்படி அரசு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு ஜார்கண்டில் ஜெய்ஸ்ரீராம் என்று சொல்ல வற்புறுத்தி முஸ்லீம் இளைஞரை ஒரு கும்பல் அடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.