இந்தியா

லிஃப்ட்டில் தொடரும் வளர்ப்பு நாய்களின் அட்டகாசம்.. அப்போ காசியாபாத், இப்போ நொய்டா!

JananiGovindhan

உத்தர பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள குடியிருப்பு லிஃப்டில் சென்ற சிறுவனை வளர்ப்பு நாய் ஒன்று அதன் உரிமையாளர் முன்பே கடித்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. சிறுவனை நாய் கடித்தபோது கண்டுகொள்ளாமல் இருந்த பெண்ணை நெட்டிசன்கள் பலரும் வசைபாடியிருந்தார்கள். மேலும் அவர் மீது போலீஸ் வழக்கும் பதிந்திருக்கிறது.

இப்படி இருக்கையில் அதே மாதிரி சம்பவம் ஒன்று நொய்டாவில் உள்ள குடியிருப்பு பகுதியில் அரங்கேறியிருக்கிறது. நொய்டாவின் செக்டார் 75 என்ற பகுதியில் உள்ள அபெக் அதெனா என்ற குடியிருப்பில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சியும் தற்போது வெளியாகியிருக்கிறது.

அதில், லிஃப்டில் வந்த ஒருவர் தன்னுடைய வளர்ப்பு நாயுடன் இருந்த போது மற்றொரு இளைஞரும் வந்திருக்கிறார். அப்போது அந்த நாய் லிஃப்டுக்குள் இருந்தவரை கடித்திருக்கிறது. இதனால் அங்கேயே விழுந்து தன்னை காப்பாற்ற முயற்சித்திருக்கிறார்.

ஆனால் அந்த நாய் அவரை முழுவதுமாக கடித்ததா எனத் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் காசியாபாத்தில் நடந்த சம்பவத்தில் சிறுவனை கடித்த நாயை அதன் பெண் உரிமையாளர் கட்டுப்படுத்தாது போல இந்த இளைஞர் இருக்கவில்லை. அதன்படி லிஃப்டில் வந்தவரை பெரிதளவில் தாக்கிவிடாதபடி நாயை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றிருக்கிறார் அந்த உரிமையாளர்.