ஆதவ் அர்ஜூனா Pt web
இந்தியா

”டெல்லி போராட்டத்திற்கு தவெக ஆதரவு” - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்

நீட் விவகாரத்தில் டெல்லியில் நடக்கும் போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஆதரிக்கிறது என செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

Premkumar S

நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கோரி டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி கடந்த 1 மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. எனினும், அவர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இந்தநிலையில் தான், கடந்த 20-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பேரணியாக சென்றனர். அப்போது அவர்களை தடுக்கும் நோக்கில், காவல்துறை கடுமையான தாக்குதலை நடத்தியது.

இதையடுத்து, டெல்லியில் போராடி வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவு தெரிவித்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மாணவர்கள் போராட்டம்

அந்தவகையில் தான், தமிழ்நாட்டிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக, மாணவர்களின் ஒரு தரப்பினர் எழும்பூர் அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்ற நிலையில், தமிழ்நாடு காவல்துறை அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்திருந்தது. தொடர்ந்து, நீட் எதிர்ப்பதாக கூறப்படும் தமிழ்நாடு அரசு மாணவர்களை கைது செய்வது ஏன்? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நேற்றைய தினம், நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய இயக்குநர் பா. ரஞ்சித் "நீங்கள் நீட் எதிர்ப்பாளர் தானே? ஏன் போராட்டத்தை ஒடுக்குகிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்தசூழலில் தான், தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா டெல்லியில் நடைபெறும் போராட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் புதிதாக கட்டப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கான விடுதியை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், “நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக டெல்லியில் மாணவர்கள் போராடி வருகின்றனர். அதற்கு நமது அரசு துணை நிற்கிறது. 

ஆதவ் அர்ஜுனா

தங்கை அனிதா உள்ளிட்ட‌ பலரை தமிழ்நாடு இழந்துள்ளது. டெல்லி குரலுக்கும், தமிழ்நாட்டு குரலுக்கும் வித்தியாசம் உள்ளது. தவெக குரல் நீட்டை ரத்து செய்ய வேண்டும் என்பது தான். அதில், அரசியல் ரீதியாகவும், தனியாகவும் உறுதியாக உள்ளோம். நீட் பயிற்சி நிறுவனங்களுக்கு பணம் அதிகம். இந்தக் கொள்கையை ஒன்றிய அரசும், பா.ஜ.க. அரசும் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றது போன்று திரும்ப பெற‌வேண்டும். அதற்கு எங்கள் முதல்வர் குரல் முக்கியமாக இருக்கும்“ எனத் தெரிவித்துள்ளார்.