போலி வீடியோ, மத்திய அரசு
போலி வீடியோ, மத்திய அரசு ட்விட்டர்
இந்தியா

போலி வீடியோ சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை: மத்திய அரசு எச்சரிக்கை!

Prakash J

நடிகை ராஷ்மிகா மந்தனா தொடர்பான சித்தரிக்கப்பட்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியுள்ள மத்திய அரசு, புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைத்தள நிறுவனங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சித்தரிக்கப்பட்ட வீடியோ வெளியிட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

நடிகை ராஷ்மிகாவை, நவீன தொழில்நுட்பம் மூலம் தவறாக சித்தரித்து வெளியிடப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து நடிகை ராஷ்மிகா வேதனை தெரிவித்த நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் உள்ளிட்ட நடிகர்கள் பலரும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். முன்னதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும், இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தார்.