இந்தியா

மாண்டியாவில் மட்டுமே போட்டியிடுவேன்: நடிகை சுமலதா

webteam

தன் கணவர் போட்டியிட்ட மாண்டியா தொகுதியில் மட்டுமே தான் போட்டியிட விரும்புவதாகவும் மற்ற தொகுதியில் போட்டியிட மாட்டேன் என்றும் நடிகை சுமலதா தெரிவித்துள்ளார். 

தமிழில், திசை மாறிய பறவைகள், முரட்டுக்காளை, கழுகு, கரையெல்லாம் செண்பகப்பூ, ஒரு ஓடை நதியாகிறது உட்பட பல படங்களில் நடித்தவர் சுமலதா. இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்துள்ளார். இவர் 1991 ஆம் ஆண்டு கன்னட நடிகர் அம்பரீஷை திருமணம் செய்துகொண்டு பெங்களூரில் வசித்து வருகிறார். அம்பரீஷ் கடந்த வருடம் நவம்பர் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். 

காங்கிரஸ் கட்சியில் இருந்த அம்பரீஷ், மாண்டியா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.ஆனவர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார், அவர் மனைவி சுமலதா.

மாண்டியாவின் நாகமங்களா தாலுகாவில் காலபைரவேஸ்வரர் கோயிலில் நேற்று சாமி தரிசனம் செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ’’என் கணவர் அம்பரீஷ் அரசியலில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் மண்டியா மாவட்ட மக்கள் மீது அவருக்கு இருந்த அன்பு குறையாதது.

அவரது அன்பை நான் நிறைவேற்ற விரும்புகிறேன். அம்பரீஷ், கடைசி வரை காங்கிரஸ் கட்சியில் இருந்தார். இதனால் நான் அந்தக் கட்சியில் இருந்து நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன். வேறு தொகுதியிலோ, வேறு கட்சி சார்பிலோ போட்டியிடும் எண்ணமில்லை’’ என்றார்.