இந்தியா

நடிகர் சோனு சூட் ரூ.20 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு: வருமான வரித்துறை தகவல்

Veeramani

பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் மும்பை இல்லத்தில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக வருமான வரித்துறை சோதனை நடத்தியது

சோனு சூட் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை மீறி ஒரு கிரவுட் ஃபண்டிங் தளத்தைப் பயன்படுத்தி வெளிநாட்டு நன்கொடையாளர்களிடமிருந்து ரூ.2.1 கோடியை திரட்டியதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

"நடிகர் மற்றும் அவரது கூட்டாளிகளின் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது, வரி ஏய்ப்பு தொடர்பான குற்றச் சான்றுகள் கிடைத்தன. அவரது கணக்கில் வராத வருமானத்தை போலியான கடன்களாக பலரிடமிருந்து பெற்றதுபோல காட்டியுள்ளார். போலியான நிறுவனங்களிடம் இருந்தும் கடன் பெற்றுள்ளார், வரி ஏய்ப்பு நோக்கத்திற்காக அவரது வருமானம் கணக்குப் புத்தகங்களில் கடன்களாக மறைக்கப்பட்டுள்ளன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மொத்த வரி ஏய்ப்பு ரூ.20 கோடியை விட அதிகமாக உள்ளது "என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

கோவிட் -19 பொதுமுடக்கத்தின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு பல உதவிகளை செய்து பெரும் பாராட்டுக்களைப் பெற்றவர் நடிகர் சோனு சூட். கோவிட் முதல் அலையின் போது கடந்த ஆண்டு ஜூலை மாதம் உருவாக்கப்பட்ட அவரது லாப நோக்கற்ற தொண்டு அறக்கட்டளை ரூ.18 கோடிக்கு மேல் நன்கொடை சேகரித்தது. இந்த ஆண்டு ஏப்ரல் வரை, அதில் ரூ.1.9 கோடி நிவாரணப் பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ளது, மீதமுள்ள ரூ.17 கோடி லாப நோக்கற்ற வங்கிக் கணக்கில் பயன்படுத்தப்படாமல் உள்ளது.

சோனுசூட் ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி அரசுடன் இணைந்து பணியாற்றுவதாக கூறிய பின்னர் வருமான வரித்துறை அவர் வீட்டில் சோதனை நடத்தியது குறித்து சிவசேனா கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் கேள்வி எழுப்பியுள்ளன. ஆம் ஆத்மி கட்சியுடன் சோனு சூட் இணைவதற்கும் வருமான வரித்துறை சோதனைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாஜக கூறியுள்ளது.