பீகார் சட்டமன்றத் தேர்தலில் போஜ்புரி சூப்பர் ஸ்டார் பவன் சிங்கின் இரண்டாவது மனைவி ஜோதி சிங், கரகட் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
243 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநிலத்திற்கு நவம்பா் 6, 11 தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும், அங்கு பலமுனைப் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், பீகார் சட்டமன்றத் தேர்தலில் போஜ்புரி சூப்பர் ஸ்டார் பவன் சிங், பாஜகவுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார். எனினும் அவருக்கு பாஜக சீட் வழங்கவில்லை. இதற்கிடையே, அவரது இரண்டாவது மனைவி ஜோதி சிங், கரகட் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார். ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோருடனான சந்திப்புக்குப் பிறகு அவர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். எனினும், அந்த சந்திப்பு குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. அவரது வேட்பு மனுவின்போது உள்ளூர் மக்கள் ஏராளமானோர் அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளனர்.
முன்னதாக, “பாஜகவின் உண்மையான தொண்டனாக இருப்பேன்” என்று அவரது கணவர் அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு ஜோதியின் இந்த நடவடிக்கை வந்துள்ளது. ஜோதி சிங்கின் இந்த அறிவிப்பு, அவரது கணவரும் போஜ்புரி நடிகருமான பவன் சிங்குடன் நீண்டகாலமாகப் பேசப்பட்டு வந்த தகராறின் மத்தியில் வந்துள்ளது. இந்த ஜோடி சிறிது காலமாகப் பிரிந்து வாழ்ந்து வருகிறது, மேலும் அவர்களின் கருத்து வேறுபாடுகள் சமூக ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் பலமுறை வெளிவந்துள்ளன. எனினும், கரகாட்டில் இருந்து அவர் சுயேச்சையாகப் போட்டியிடுவது, தனது சொந்த அரசியல் பாதையை அமைக்கும் அவரது நோக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும், ஊடகங்களின் கவனமும் பொதுமக்களின் அனுதாபமும் அதிகரித்து வருவதால், ஜோதி சிங்கின் அரசியலில் நுழைவு பீகாரின் தேர்தல் களத்தில் ஒரு புதிய திருப்பத்தைச் சேர்த்துள்ளது.