இந்தியா

கொல்லப்பட்ட நடிகைக்கு போதை கும்பலுடன் தொடர்பு?

webteam

மும்பையில் கொலை செய்யப்பட்டு கிடந்த நடிகை கிருத்திகாவுக்கும் போதை கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 

இந்தி டி.வி. நடிகை, கிருத்திகா சவுத்ரி. மும்பை அந்தேரியில் குடியிருந்த இவரின் வீட்டில் இருந்து கடந்த மாதம் 12-ம் தேதி துர்நாற்றம் வீசியது. இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கிருத்திகா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.  உடல் அழுகிய நிலையில் இருந்தது. அதை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
’வீட்டிற்குள் நுழைந்த போது கிருத்திகா அரை நிர்வாணமாக கிடந்தார். அவரது உடல் படுக்கையிலும், கால்கள் தொங்கிக்கொண்டு இருந்தன. அவர் தலையில் காயம் இருந்தது. அவர் இரும்பு வளையத்தால் தாக்கப்பட்டு இருக்கலாம். இரண்டு நாட்களுக்கு முன், 2 பேர் அவர் வீட்டிற்கு வந்துள்ளனர்’ என்று அப்போது போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து நடந்த விசாரணையில் கிருத்திகாவுக்கு போதைக் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. கிருத்திகா அடிக்கடி பார்ட்டி நடத்துவார் என்றும் அப்போது போதை மருந்துகளை அவர்கள் பயன்படுத்துவார்கள் என்றும் கிருத்திகா இறப்பதற்கு முன் அவர் வீட்டுக்கு வந்த இரண்டு பேரும் போதைக் கும்பலை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள்தான் அவருக்கு போதை பொருட்களை சப்ளை செய்பவராக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
இதை உறுதிபடுத்தும் விதமாக, நடிகையின் வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள், அந்த இரண்டு பேர் அடிக்கடி வருபவர்கள் என்றும் அவர்களுடன் கிருத்திகா தகராறில் ஈடுபடுவார் என்றும் அது பணம் தொடர்பான பிரச்னை என்றும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விசாரணையை போலீசார் மேலும் முடுக்கி விட்டுள்ளனர்.