உயிரிழந்த ஹரிஷ்
உயிரிழந்த ஹரிஷ் புதியதலைமுறை
இந்தியா

அனுமனாக நடிக்கும்போதே சுருண்டு விழுந்து உயிரைவிட்ட கலைஞர்.. நாடகத்தின் ஒருபகுதியென நினைத்த சோகம்!

யுவபுருஷ்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் ராமர் சிலைக்கான பிராண பிரதிஷ்ட்டை நேற்று கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்நிகழ்வையொட்டி இந்து முன்னணியினர் உட்பட நாடு முழுவதும் பலரும் கோவில்களில் சிறப்பு பூஜைகளை மேற்கொண்டனர். போலவே பஜனை, அன்னதானம் என்று பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஒருசில இடங்களில் ராமாயணத்தின் காட்சிகளும் அரங்கேற்றப்பட்டது.

அப்படி, ஹரியானா மாநிலம் பிவானி எனும் பகுதியில் ராம் லீலா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ராமர், லட்சுமனன், சீதா ஆகியோரின் வேடங்களை அணிந்து மூன்று பேர் நிற்க, ராம பக்தராக கருதப்படும் அனுமன் வேடத்தை ஒருவர் ஏற்றிருந்தார். ராமர் பாட்டுப்பாடிய அனுமன் அவர்களை வலம் வந்து உட்காருவது, நடனமாடுவது என்று நாடகம் அரங்கேறியது. அப்போது ராமர் வேடமணிந்தவர் பாதத்திற்கு அருகில் உட்காரச் சென்ற அனுமன் வேடமணிந்தவர் சட்டென சரிந்து சுருண்டு விழுந்தார். இதனைப்பார்த்த அங்கிருந்தவர்கள், ‘இது நடிப்பின் ஒரு பகுதி போலும்’ என்று நினைத்தபடி தொடர்ந்து கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். இதற்கிடையே, லட்சுமனன் வேடமணிந்தவர், விழுந்தவரை எழுப்ப முயன்றும் அவர் எழும்பவில்லை.

தொடர்ந்து, அவரை அன்சால் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்ற விழா குழுவினர், நடந்ததை எடுத்துக்கூறியுள்ளனர். இதற்கிடையே அவரை சோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இறப்புக்கான காரணம் மாரடைப்பு என்பதும் தெரியவந்தது. அனுமனாக நடித்துக்கொண்டிருந்தவர் கீழே விழுந்தபோது, நடிப்பதாக நினைத்துக்கொண்டு யாரும் உதவ முன்வராததும், நிகழ்ச்சியின்போதே அனுமனாக அவர் உயிரிழந்ததும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த நபர் குறித்து விசாரிக்கையில், அவர் பெயர் ஹரிஷ் மேத்தா என்பதும், அவர் முன்னாள் பொறியாளர் என்பதும் தெரியவந்தது. பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஹரிஷ், 25 ஆண்டுகளாக அனுமன் வேடம் அணிந்து நாடகங்களில் நடித்து வந்துள்ளார். அந்த வகையில், அவரது கடைசி மூச்சும் ஏற்று நடித்த அனுமன் பாத்திரத்துடன் நின்றதுதான் சோகம்.