சாலைகளில் மாடுகளை கைவிட்டு விடும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மாடுகள் காரணமாக விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கும் நடைமுறைகளை மத்திய, மாநில அரசுகள் வகுக்க வேண்டும் என்றும், ஆதரவற்ற மாடுகளை அடையாளம் கண்டு பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சாலைகளில் திரியும் மாடுகளால் ஏற்படும் விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்க, விரிவான வழிமுறைகளை உருவாக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் நபர் உயிரிழந்த வழக்கில் நீதிபதிகள் சஞ்சய் கரோல், என். கோடீஸ்வர சிங் அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மாடு முட்டி உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கு 15 லட்சம் ரூபாய் இழப்பீட்டை 4 வாரங்களுக்குள் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். கால்நடைகளுக்கு காதுகளில் அடையாளக் குறியீடு செய்வதுடன், அவை ஆதரவற்றுத் திரிவதைத் தடுத்து ஆயுள் வரை பராமரிக்க வேண்டும் என்றும், மாடுகளை கைவிடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை தேவை என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.