இந்தியா

“அபைட் வித் மீ” குடியரசுதின நிறைவு விழாவில் காந்தியின் விருப்ப பாடலை நீக்கியது மத்திய அரசு

Veeramani

குடியரசு தின நிறைவு விழாவின்போது இசைக்கப்படும் 'அபைட் வித் மீ' என்ற மகாத்மா காந்திக்கு விருப்பமான பாடலை மத்திய அரசு நீக்கியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் டெல்லி ராஜபத் சாலையில் கோலாகலமாக நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க நாட்டின் முப்படைகளும் வரும். குடியரசு தின விழாவில் பங்கேற்க வந்த முப்படை வீரர்கள் தங்களது முகாமுக்கு திரும்பும் முன் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29ம் தேதி நடத்தப்படும் அணிவகுப்பே "பாசறை திரும்புதல்" ஆகும். இந்நிகழ்வு டெல்லியில் ஆண்டுதோறும் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்வின் போது, முப்படையை சேர்ந்த இசைக் குழு கதம் கடம் பதாயே ஜா,சாரே ஜஹான் சே அச்சா உள்ளிட்ட பல்வேறு பாடல்களின் இசையை இசைப்பார்கள். இதில் ஒன்று தான் மகாத்மா காந்தியின் விருப்பான பாடலான "Abide With Me" எனும் பாடலை இசைப்பார்கள். இந்த பாடல் இல்லாமல் சுதந்திர இந்தியாவின் குடியரசு தினம் நிறைவடையாது; அந்த வகையில் இப்பாடல் 2020ம் ஆண்டு குடியரசு தின விழாவில் இடம்பெறவில்லை. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் 2021 குடியரசு தின விழாவில் இடம்பெற்றது.

ஆனால் 2022ம் ஆண்டில் குடியரசு தின விழா இன்னும் சில நாட்களில் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள நிலையில் 29ம் தேதி நடத்தப்படும் பாசறை திரும்பும் நிகழ்வின் இறுதி பட்டியலில் இப்பாடல் மீண்டும் இடம்பெறவில்லை எனும் தகவல் வெளியாகியுள்ளது. 29ம் தேதி நடைபெறவுள்ள பாசறை திரும்பும் நிகழ்வில் 29 இசை வகைகள் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில் அதில் "அபிட் வித் மீ" எனும் காந்தியின் விருப்பமான பாடல் பட்டியலிடப்படவில்லை.

நேற்றைய தினம் சரித்திர படைப்புகளில் ஒன்றான அமர் ஜவான் ஜோதி இந்தியா கேட் பகுதியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டது, இவை காந்தி மற்றும் காங்கிரஸ் வரலாறை திட்டமிட்டு மறைக்கும் செயல் என சர்ச்சைகள் எழுந்த நிலையில் காந்தியின் விருப்பமான பாடல் நீக்கப்பட்டுள்ளது இந்நேரத்தில் குறிப்பிடத்தக்கது.