அபிஜித் திப்கே X
இந்தியா

க்யா போல்தி பப்ளிக்..? மக்களிடம் செல்லும் கரப்பான் ஜனதா கட்சி.. அபிஜித் திப்கே முக்கிய அறிவிப்பு!!

பொதுமக்களிடம் நேரடியாக சென்று அவர்களின் குறைகளைக் கேட்கும் நோக்கில் 'க்யா போல்தி பப்ளிக்' என்ற பெயரில் நாடு தழுவிய பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜித் திப்கே தெரிவித்துள்ளார்.

Premkumar S

நீட் வினாத்தாள் கசிவுக்கு முழுப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த ஜூன் மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த இந்தப் போராட்டம் தேசிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்தநிலையில், தர்மேந்திர பிரதான் தனது மத்திய அமைச்சர் பதவியை கடந்த, 2026 ஜூலை 25 அன்று ராஜினாமா செய்தார். அதன்பிறகு, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வி அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

டெல்லி மாணவர்கள் போராட்டம்

இவ்வாறு, சமூக வலைதளங்களில் ஒரு பகடி இயக்கமாகத் தொடங்கப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, நீட் விவகாரத்தில் நடத்திய தொடர் போராட்டங்களுக்குப் பிறகு, இந்த இயக்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. இந்நிலையில் தான், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே, வரும் செப்டம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் அடித்தட்டு மக்களிடம் நேரடியாகச் சென்று அவர்களின் கருத்துகளையும் பிரச்சினைகளையும் கேட்கும் "க்யா போல்தி பப்ளிக்?" என்ற மக்கள் தொடர்பு பிரச்சாரத்தைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சாரத்தின் மூலம் வேலையின்மை, கல்வி முறைகேடுகள், அரசு பள்ளிகளின் தர மேம்பாடு, மாணவர்களின் எதிர்காலம் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அவர்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக நாடு முழுவதும் பல நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் சென்று, மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுடன் நேரடியாக உரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அபிஜித் திப்கே

மேலும், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த இயக்கத்தில் உறுப்பினர்களாக இணையுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். அதேவேளையில், தேர்தல் அரசியலில் ஈடுபடுவது குறித்து தற்போது எந்தத் திட்டமும் இல்லை என்றும், மக்களின் குரலை வலுப்படுத்தும் அழுத்தக் குழுவாகவே கரப்பான் ஜனதா கட்சி தொடர்ந்து செயல்படும் என்ற தனது நிலைப்பாட்டை அபிஜித் திப்கே மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.