இந்தியா

பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க காலக்கெடு நீட்டிப்பு

rajakannan

பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான காலஅவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் பான் என்னும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கால அவகாசத்தை ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டித்து, மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு முன்பாக கடந்த ஆண்டில் ஜூலை 31, ஆகஸ்ட் 31, டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யும்போது, ஆதார் எண்ணையும் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வங்கிக் கணக்கு எண் மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் கால வரையறையின்றி நீட்டித்து உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பன வழக்கை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.