கேரளாவின் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவு ஒரு திருமண மண்டபமாக மாறிய அரிய நிகழ்வு நடந்துள்ளது. சாலை விபத்தில் காயமடைந்த மணமகளுக்கு, துப்போலி பகுதியைச் சேர்ந்த மணமகன் தாலி கட்டியுள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கேரளா ஆலப்புழா, கொம்மாடியைச் சேர்ந்த அவானி மற்றும் தும்பொலியைச் சேர்ந்த வி.எம். ஷரோன் ஆகியோருக்கு இடையேயான திருமணம் கொச்சியில் உள்ள வி.பி.எஸ். லேக்சோர் மருத்துவமனையில் நடைபெற்றது. இந்தத் திருமணம் முதலில் வெள்ளிக்கிழமை மதியம் தும்பொலியில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மணமகள் அவானி வெள்ளிக்கிழமை அன்று சாலை விபத்தில் காயமடைந்ததால், அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
திருமணத்தன்று அதிகாலை 3 மணியளவில் ஆலப்புழாவின் குமரகோமில் மணப்பெண் அலங்காரத்திற்காக தனது குடும்பத்தினருடன் பயணம் செய்து கொண்டிருந்த அவனி பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டது. திட்டமிட்டபடி திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக, மருத்துவமனை நிர்வாகத்தின் அனுமதியுடன், அவசர சிகிச்சை அறையிலேயே திருமணம் எளிமையாக நடத்தப்பட்டது. மருத்துவமனை அதிகாரிகள், நரம்பியல் அறுவை சிகிச்சை குழுவுடன் கலந்தாலோசித்த பிறகு, அவசர சிகிச்சைப் பிரிவிற்குள் விழாவை நடத்த ஏற்பாடு செய்தனர்.
நேற்று, மதியம் 12.15 மணி முதல் 12.30 மணி வரை, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில், அவனி ஒரு ஸ்ட்ரெச்சரில் படுத்திருக்கும் போது ஷரோன் திருமணம் செய்து கொண்டார். நோயாளி பராமரிப்புக்கு இடையூறு ஏற்படாமல் சுருக்கமான விழா நிறைவடைந்தது.
நரம்பியல் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் சுதீஷ் கருணாகரன் கூறுகையில், அவனிக்கு முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்றும் கூறினார். ஷரோன் ஆலப்புழாவில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இதற்கிடையில், திருமண மண்டபத்தில் ஏற்கனவே கூடியிருந்த விருந்தினர்களுக்கு திட்டமிட்டபடி உணவு பரிமாறப்பட்டது. இந்த சம்பவம் கேரளா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.