இந்தியா

''சரித்திரத்தில் பங்கேற்க வந்தேன்'' - விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட 14 வயது சிறுமி

kaleelrahman

டெல்லியிலும் அதன் எல்லைகளிலும் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நடக்கும் போராட்டத்தில் 14 வயது சிறுமியும் பங்கேற்றிருக்கிறார்.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சேர்ந்த 14 வயது சிறுமி பாவ்லின் கவுர். டெல்லியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் இவர், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கலந்து கொண்டுள்ளார். பை நிறைய சாக்லேட்டுகளோடு செல்லும் சிறுமி அவர்களுக்கு கொடுத்து மகிழ்கிறாள்.

டெல்லியில் விவசாயிகளுக்கு ஆதரவாக கலந்து கொண்டுள்ள பாவ்லின் கவுர், அங்கு பெண்களுடன் சேர்ந்து ரொட்டி சுடும் இவர், வயதானவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். ஆங்கிலத்தில் வரும் செய்திகளை பஞ்சாப் மொழியில் மொழிபெயர்த்து சொல்வது என உற்சாகமாக இருக்கிறார்.


இதையடுத்து ஏன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளீர்கள் எனக்கேட்ட போது, ’’நான் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தருவதற்காக வந்திருக்கிறேன். எனது குடும்பம் இந்த போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறது. அதனால் தான் நான் இங்கு வந்திருக்கிறேன். எதிர்காலத்தில் இந்தப் போராட்டம் மிகப்பெரிய சரித்திரமாக இருக்கும். அந்த பெரிய சரித்திரத்தில் என் பங்கும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதில் கலந்து கொண்டிருக்கிறேன். நான் பெரியவளாக வளரும் போது எனது அடுத்த தலைமுறையிடம் இந்த வரலாறை பேசுவேன். போராட்டக்களத்தில் இருப்பதால் தமது படிப்புக்கு எந்த பாதிப்பும் வராது’’ என்றார்.