இந்தியா

ஓடிய காரில் இருந்து பணத்தை அள்ளி வீசிய நபர்... வைரலாகும் வீடியோ!

webteam

ஓடிக் கொண்டிருக்கும் காரில் இருந்து ஒருவர் ரூபாய் நோட்டுகளை சாலையில் அள்ளிவீசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹரியானா மாநிலம் குருகிராமில் இந்த வீடியோ பதிவானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்குள்ள சாலையில் வேகமாய்ச் செல்லும் கார் ஒன்றில், பின்பக்கத்தில் உள்ள டிக்கியில் அமர்ந்தபடி, நபர் ஒருவர் ரூபாய் நோட்டுகளை அள்ளி சாலையில் வீசுகிறார். இந்த காட்சி வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இதுகுறித்து குருகிராம் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், ” 'பர்ஸி' வெப் சீரிஸில் வரும் காட்சியை போன்று அந்த நபர் வீடியோ உருவாக்க முயன்றுள்ளார். இதற்காக, கோல்ப் மைதான சாலையில் காரில் இருந்து ரூபாய் நோட்டுகளை வீசி வீடியோ உருவாக்க முயன்றிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர்மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

இதேபோல் கடந்த ஜனவரி மாதம் 24ஆம் தேதி, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கே.ஆர். மார்க்கெட் சாலை மேம்பாலத்தில் 35 வயதுமிக்க நபர் ஒருவர், 10 ரூபாய் நோட்டுகளை சாலையில் எடுத்து வீசியிருந்தார் என்பதும், இதனால் கே.ஆர்.மார்க்கெட் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்