இந்தியா

கும்மிடிப்பூண்டி : சாலையோரம் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட வடமாநில தொழிலாளி

கும்மிடிப்பூண்டி : சாலையோரம் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட வடமாநில தொழிலாளி

webteam

கும்மிடிப்பூண்டி அருகே சாலையோரம் வடமாநில தொழிலாளி  ஒருவர் உயிரிழந்தார். சொந்த மாநிலத்திற்கு நடக்க முயன்ற போது உயிரிழந்தாரா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பொது முடக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வடமாநில தொழிலாளர்கள் ஆங்காங்கே தங்களது சொந்த மாநிலங்களுக்கு நடந்தே செல்கின்றனர்.  பெரும்பாலானோர் அரசு சார்பில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையோரம் வடமாநில தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்தவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பையில் சோதனை நடத்தியதில் உயிரிழந்தவர் ஒடிசாவை சேர்ந்த ராம்பிஸ்வாஸ் (42) என்பது தெரியவந்தது. இவர் சொந்த மாநிலத்திற்கு நடக்க முயன்ற போது பசியால் மயங்கி விழுந்து உயிரிழந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.