Lovers
Lovers pt desk
இந்தியா

கர்நாடகா | சினிமா பாணியில் தாலி கட்டும் நேரத்தில் காதலியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய காதலன்!

webteam

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் கவேனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் நவீன் (25). இவரும் ஹாசன் பேலூரை சேர்ந்த 21 வயது இளம் பெண் தேஜஸ்வினியும் காதலித்து வந்துள்ளனர். இதையறியாத பெண்ணின் குடும்பத்தினர், ஷிவமொகாவை சேர்ந்த பிரமோத் குமார் என்பவருடன் தேஜஸ்வினிக்கு திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். பெற்றோருக்கு பயந்த தேஜஸ்வினி, தன் காதலை மூடி மறைத்து திருமணத்துக்கு சம்மதித்துள்ளார்.

Marriage hall

இந்நிலையில், பேலூரின் ஒக்கலிகர் பவனில், திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது முகூர்த்த நேரத்தில், மணமகன் தாலி கட்டும்போது, திடீரென அங்கு வந்த காதலன் நவீன், தாலியை பறித்துக் கொண்டு, “மணப்பெண் என்னைதான் காதலிக்கிறாள். அவளை எனக்கு திருமணம் செய்து வையுங்கள்” என கூறியுள்ளார். இதனால், திருமண மண்டபத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையடுத்து பெண்ணின் குடும்பத்தினர் பேலூரு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து அங்கு வந்த பேலூரு போலீசார், விசாரணை நடத்தினர். அப்போது மணப்பெண் “வீனை யாரென்று எனக்குத் தெரியாது” எனக் கூறியுள்ளார். மணமகளின் காதல் விவகாரம் தெரியவரவே மணமகன் பிரமோத் குமார் “இந்த திருமணமே தேவையில்லை” என அங்கிருந்து சென்று விட்டார். இதையடுத்து நவீன் மற்றும் மணப்பெண் தேஜஸ்வினி ஆகியோரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

காவல் நிலையம்

விசாரணையில், இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும். அவர் இருவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் இளம்பெண் அனுப்பிய குறுஞ்செய்திகளை காவல் நிலையத்தில் நவீன் காட்டியுள்ளார். நேற்றிரவு அனுப்பிய குறுஞ்செய்தியில், “இந்த திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை. நான் திருமணத்தை நிறுத்த முடியாது. நீ எப்படியாவது வந்து இந்த திருமணத்தை நிறுத்தி விடு” என தேஜஸ்வினி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

இதைத் தொடர்ந்து இருவரது பெற்றோரையும் அழைத்துப் பேசிய போலீசார், இருவருக்கும் திருமணம் செய்து வைக்க அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து இரு வீட்டாரும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.