இந்தியா

பெற்றோரின் அன்பு கிடைக்காத பொறாமையால் தங்கைக்கு சூடு வைத்த 5 வயது சிறுமி

EllusamyKarthik

(கோப்பு புகைப்படம்)

ஒடிசா மாநிலத்தில் வசித்து வரும் ஐந்து வயது சிறுமி ஒருவர் பெற்றோரின் அன்பு தனக்கு கிடைக்காத காரணத்தினால் பிறந்து சில மாதங்களான தனது தங்கைக்கு ஃபோர்க் ஸ்பூனால் சூடு வைத்துள்ளார். வீட்டில் பெற்றோர் இல்லாத நேரமாகவும், அவரது அம்மா வீட்டு வேலைகளை மும்முரமாக கவனித்த நேரமாகவும் பார்த்து இந்த செயலை செய்துள்ளார் அந்த சிறுமி. 

பல நாட்களாக இதை அந்த சிறுமி செய்து வந்த நிலையில் வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவினால் தற்போது கையும் களவுமாக பெற்றோரிடம் சிக்கி உள்ளார். இந்த சம்பவம் அங்குள்ள கட்டாக் நகரில் நடைபெற்றுள்ளது. 

தங்கள் இளைய மகள் எப்போதும் அழுது கொண்டே இருப்பதை கவனித்த அந்த தம்பதியர் அவளை குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளனர். அப்போது குழந்தையின் உடம்பில் சிறு சிறு காயங்கள் இருப்பதை மருத்துவர் கவனித்துள்ளார். முதலில் அலர்ஜி காரணமாக அந்த காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என எண்ணிய மருத்துவர், வைத்தியம் கொடுத்துள்ளார். காயங்கள் குணமான நிலையில் மீண்டும் புதிய இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளன. அதை கவனித்த மருத்துவர், வீட்டில் சிசிடிவி கேமரா வைக்குமாறு அந்த தம்பதியரிடம் சொல்லி உள்ளார். 

அதன் பேரில் அந்த தம்பதியர் கேமரா வைத்துள்ளனர். அதில் பதிவான காட்சிகளை எடுத்து பார்த்த போதுதான் ஐந்து வயதான தங்களது மூத்த மகள், இளைய மகளின் உடலில் ஃபோர்க் ஸ்பூன் கொண்டு சூடு வைத்தது தெரியவந்துள்ளது. தன்னைவிட தனது தங்கை மீது பெற்றோர்கள் அதிகம் பாசம் வைத்த காரணத்தினால் இதை அந்த சிறுமி செய்துள்ளதாக தெரிகிறது.