இந்தியா

ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி

rajakannan

ஐஎன்எஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஐ.என்.எஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது நீதிபதி அஜய்குமார் முன்னிலையில் இன்று விசாரணை நடைபெற்றது. 

அப்போது, நீதிமன்றத்தில் வைத்து விசாரிப்பது என்றால் அரை மணி நேரம் அனுமதிக்கிறேன் என நீதிபதி தெரிவித்தார். ஆனால், நீதிமன்றத்தில் விசாரிக்க விரும்பவில்லை, சிறையிலேயே விசாரிக்கிறோம் என அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து, டெல்லி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் 30 நிமிடங்கள் விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறைக்கு நீதிபதி அனுமதி வழங்கினார்; அத்துடன் தேவைப்பட்டால் ப.சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்கவும் அனுமதி வழங்கினார்.

இதனையடுத்து, திகார் சிறையில் நாளை 8.30 மணிக்கு ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் ஐ.என்.எஸ் மீடிய முறைகேடு வழக்கு தொடர்பாக விசாரிக்க உள்ளனர். சுமார் 30 நிமிடங்கள் இந்த விசாரணை நடைபெறும். இந்த விசாரணைக்கு பின்னர் தேவைப்பட்டால் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையினர் கைது செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.