மாதிரி படம்
மாதிரி படம் PT
இந்தியா

பட்டாசு வெடிவிபத்து: மாற்றுத்திறனாளியான தந்தையை காப்பாற்றி தன் உயிரை விட்ட சிறுவன்

Jayashree A

மத்தியப் பிரதேசத்தின் ஹர்தா மாவட்டத்தில் மகர்தா சாலையில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. இதில் 6-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சமீபத்திய தகவல் வெளியாகியிருந்தது.

இந்த விபத்தில் மாற்றுத்திறனாளியான தனது தந்தையை காப்பாற்ற நினைத்த 9 வயது சிறுவன் உயிரிழந்த செய்தி துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மகர்தா சாலையில் பட்டாசு ஆலையில் அருகில் பீடா கடை நடத்தி வருபவர் சஞ்சய். மாற்றுத்திறனாளியான இவர் இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில், சக்கர நாற்காலியின் உதவியுடன் வாழ்க்கையை நடத்திக்கொண்டு வருகிறார். இருவருக்கு மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இதில் மனைவியும், மகளும் விபத்து நடந்த பட்டாசு ஆலையில் வேலைசெய்து வரும் நிலையில் இவர்களின் இரண்டாவது மகன் ஒன்பது வயதான ஆஷிஷ், அருகில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளான்.

இந்நிலையில் சம்பவத்தன்று ஆஷிஷ் பள்ளிக்கு செல்லத் தயாராக இருந்தபோது, பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தீ மளமளவென அருகில் இருந்த குடியிருப்புகளுக்கு பரவியதுடன், வெடிவிபத்தில் கட்டடங்களும் குடியிருப்பு பகுதிகளும் அதிக சேதமடைந்தது. மக்கள் அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து வெளியேறினர். அதேபோல் பட்டாசு ஆலையில் வேலை செய்து வந்த சஞ்சயின் மனைவியும், மகளும் அங்கிருந்து தப்பித்து பாதுகாப்பு இடத்திற்கு விரைந்துள்ளனர்.

அதேநேரத்தில் மாற்றுத்திறனாளியான சஞ்சய்யால் உடனடியாக அங்கிருந்து வெளியேற முடியவில்லை. பள்ளிக்கு தயாராகிக்கொண்டிருந்த ஆஷிஷ் தனது தந்தையை அங்கேயே விட்டுச்செல்ல மனமில்லாமல் காப்பாற்ற நினைத்து, அவர் அமர்ந்திருந்த சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு அங்கிருந்து வெளியேறி உள்ளனர்.

அச்சமயம், வெடிவிபத்தால் சிதைந்த வீடுகளின் கான்கிரீட் பாகங்கள் இருவர் மீதும் விழுந்துள்ளது. இதில் இருவருக்கும் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இருவரும் மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனில்லாமல் ஆஷிஷ் உயிரிழந்துள்ளதாகவும்இ சஞ்சய் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தனது மாற்றுத்திறனாளியான தந்தையை காப்பாற்ற நினைத்த சிறுவன் உயிரிழந்த செய்தி அனைவரின் மனதையும் சஞ்சலமைடைய செய்துள்ளது.