உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்ட போலீசார்
உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்ட போலீசார்  file image
இந்தியா

தமிழகத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ஆந்திராவில் சடலமாக மீட்பு; உறவுக்கார பெண் கொலை செய்தது அம்பலம்!

PT WEB

செய்தியாளர் - எழில்

------

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பல்லவடா பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் பணியாற்றி வருகிறார். இவரது 7 வயது மகன் ஹனீஷ். நேற்று முன்தினம் பல்லவாடா பகுதியில் இவர் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்த சிறுவன் ஹனீஷ்

நீண்ட நேரம் ஆகியும் ஹனீஷை காணவில்லை என்பதால் சிறுவனின் பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ரேகா என்ற பெண் தனது இருசக்கர வாகனத்தில் சிறுவனை அழைத்துச் சென்றதாக அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக சுரேஷ் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ரேகாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுவனை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று, ஆந்திர மாநிலம் வரதைய்யபாளையம் அருகே உள்ள பி.என்.கண்டிகை பகுதியில் கொலை செய்து கோணிப்பையில் கட்டிப் போட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார் அவர்.

இதனையடுத்து ஆந்திர மாநிலம் பி.என்.கண்டிகைக்குச் சென்ற போலீசார் கோணிப்பையில் சடலமாகக் கிடந்த ஹனீஷ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காளகஸ்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

7 வயது சிறுவனை உறவுக்கார பெண்ணே கொலை செய்து சாக்குப் பையில் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையின் பின்னணி குறித்த விசாரணை தொடர்கிறது.