இந்தியா

புதுச்சேரியில் அமலுக்கு வந்தது 55 மணி நேர ஊரடங்கு

webteam

கொரோனா பரவலைத் தடுக்க தளர்வுகளுடன் கூடிய 55 மணி நேர முழு முடக்கம் புதுச்சேரியில் அமலுக்கு வந்தது.

கொரோனா 2ஆம் அலையைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. அதனையொட்டி, புதுச்சேரியில் நேற்றிரவு இரவு 10 மணி முதல், திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 55 மணி நேரம் ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மருந்தகம், பால், மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்குகள், உணவகங்கள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

அரசு மற்றும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டுமென்றும், பயணிகள் என்றால் டிக்கெட் வைத்திருக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.