இந்தியா

மனைவியை பழிவாங்க இப்படியா செய்வது? பிறப்புறுப்பை வெட்டிக்கொண்ட கணவர்.. பீகாரில் பயங்கரம்!

Rishan Vengai

கணவர் மனைவியிடையே ஏற்பட்ட குடும்ப சண்டையில், மனைவி தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டதால், விரக்தியடைந்த கணவன் கோபத்தில் தன் அந்தரங்க உறுப்பை வெட்டிக்கொண்டுள்ள சம்பவம் பீகாரில் நடந்திருக்கிறது.

பீகார் மாநிலத்தில் உள்ள மாதேபுரா மாவட்டத்தில் முரளிகஞ்ச் அருகே நயா நகர் காவ்ன் கிராமத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கிருஷ்ணா பசுகி என்ற 25 வயது வாலிபர் பஞ்சாபில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மகர சங்கராந்தி பண்டிகையொட்டி நயா நகரில் உள்ள தன் வீட்டிற்கு சென்று மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருந்துள்ளார். கிருஷ்ணா மற்றும் அனிதா தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

மகர சங்கராந்தி பண்டிகையன்று அவருக்கும் அவருடைய மனைவிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் மனைவி கோபித்துக்கொண்டு அவருடைய பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். கணவர் எவ்வளவு முறை கெஞ்சி கூப்பிட்டும், நேரில் போய் அழைத்தும் அவர் வராமலேயே இருந்து வந்துள்ளாதக தெரிகிறது.

இந்நிலையில் கடந்த ஜனவரி 20ஆம் தேதி அவருக்கும், அவர் மனைவிக்கும் நீண்ட நேர வாக்குவாதம் நிகழ்ந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். அந்த சண்டையில் கிருஷ்ணா எவ்வளவு கூப்பிட்டும் மனைவி அதை காதில் போட்டுக்கொள்ளாததால், விரக்தியடைந்த கணவர் கோபத்தில் மனைவியை பழிவாங்குவதற்காக தன் அந்தரங்க உறுப்பை கூர்மையான ஆயுதத்தின் உதவியால் வெட்டி தரையில் வீசியுள்ளார்.

அப்போது வலி தாங்காமல் அவர் அலறும் சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், ரத்தவெள்ளத்தில் அவரை மீட்டு மதேபுராவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் பாட்னாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மதேபுரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர், கிருஷ்ணாவின் அந்தரங்க உறுப்பு வெட்டப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார். பாட்னாவில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.