இந்தியா

கார் விபத்துகளால் உயிரிழந்தவர்களில் 78% பேர் சீட் பெல்ட் அணியாதவர்கள்: புள்ளிவிவரத்தில் தகவல்

webteam

தமிழகத்தில், கடந்தாண்டு நடைபெற்ற கார் விபத்துகள் மூலம் உயிரிழந்தோரில் 78 சதவீதம் பேர் சீட் பெல்ட் அணியாதவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை கார் விபத்தில் சிக்குபவர்களில் 50% உயிர் பிழைக்கக் காரணம் சீட் பெல்ட் அணிவதுதான் என புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த வருடம் தமிழகத்தில் 24,671 பேர் கார் விபத்தில் சிக்கியதாகவும், அதில் 22,603 பேர் காயங்களுடன் தப்பித்துள்ளதாகவும் புள்ளிவிவரம் சொல்கிறது. இதில் 12,548 பேர் சீட் பெல்ட் அணிந்தவர்கள்.

சாலை விபத்து குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி தமிழகத்தில் கடந்தாண்டு 2 ஆயிரத்து 68 பேர் கார் விபத்துகளில் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், ஆயிரத்து 614 பேர் சீட் பெல்ட் அணியாதவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு தமிழக மக்களிடையே அதிகளவில் ஏற்படாததே உயிரிழப்புகள் அதிகரிக்க காரணமாகக் கூ‌றப்படுகிறது. கடந்தாண்டு மட்டும் சீட் பெல்ட் அணியாமல் சென்றதற்காக சுமார் ‌11.7 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன‌. 

காரில் பயணிக்கும் மூன்றில் ஒரு குழந்தை சீட் பெல்ட் அணியாமல் இருப்பதாகவும், அவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக இருக்கைகளை பயன்படுத்தாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீட் பெல்ட் அணியாததற்கு காரணம் என்ன?

  • சீட் பெல்ட் அணிவதற்கு சவுகரியமாக இல்லை அல்லது சீட் பெல்ட் எப்படி அணிவது என தெரியவில்லை - 34.7%
  • சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லை - 37.8%
  • சீட் பெல்ட் பாதுகாப்பு குறித்து தெரியாதது - 9.4%
  • ஆடைகளை கசக்கிவிடும் அல்லது கறையாக்கிவிடும் என்ற பயம் - 4.6%
  • சீட் பெல்ட் அணிந்தால் சிக்கிக்கொள்வோம் என்ற பயம் - 1.6%