இந்தியா

7 வயது மகனுக்கு பழுத்த கம்பியால் சூடு! கண்ணில் மிளகாய் பொடி தேய்த்து தண்டனை-இதற்கா இப்படி?

webteam

7 வயது மகனின் கை, கால்களில் கம்பியை பழுக்க வைத்து சூடு போட்டதோடு, கண்ணில் மிளகாய் பொடி தேய்த்து சித்ரவதையான தண்டனை கொடுத்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி அருகே அட்டப்பளத்தைச் சேர்ந்த தாயார் ஒருவர் தனது 7 வயது மகனுக்கு, கம்பியை பழுக்க வைத்து கை கால்களில் சூடு போட்டதோடு, கண்ணில் மிளகாய் பொடி தேய்த்து சித்ரவதை செய்துள்ளார். விளையாடுவதற்காக பக்கத்து வீட்டில் இருந்த இரு சக்கர வாகனத்தின் டயரை எடுத்து வந்ததால், ஆத்திரமடைந்த தாயார் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார்.

தற்செயலாக அந்த பெண்ணின் வீட்டுக்கு மகளிர் சுய உதவிக் குழு விஷயமாக பேசுவதற்காக சென்ற அப்பகுதியின் வார்டு உறுப்பினர் ஜாய் மோள், சிறுவன் அழுவதை கேட்டு என்னை என விசாரித்துள்ளார்.

அதற்கு தாய் கம்பியை பழுக்க வைத்து சூடு போட்டதாக கூறிய சிறுவன், தனது கை கால்களையும் காட்டியுள்ளார். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த வார்டு உறுப்பினர் ஜாய்மோள், உடனடியாக குமுளி போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின்படி சம்பவ இடத்திர்கு வந்த காவல்துறையினர், கொடூர தாயை கைது செய்துள்ளனர். தீச்சூடு காயம் பட்ட சிறுவனை மீட்டு குமுளி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

சம்பவம் குறித்து புகார் அளித்த வார்டு உறுப்பினரான ஜாய் மால் கூறும் போது, அந்தப் பெண் குழந்தையை எப்போதும் துன்புறுத்துவதாக சுற்றிலும் இருப்பவர்கள் அடிக்கடி தெரிவிப்பார்கள். ஆனால் தற்போது அதன் உச்சகட்டமாக இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பதாக தெரிவித்தார்.

பெற்ற மகனையே கம்பியால் சூடு போட்ட தயாரின் இந்த செயல், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.