இந்தியா

பாஜக எம்.எல்.ஏ மகன் உட்பட 7 மாணவர்கள் கார் விபத்தில் மரணம்: பிரதமர் இரங்கல்

Sinekadhara

மகாராஷ்டிராவில் பாஜக எம்.எல்.ஏ மகன் உட்பட 7 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கார் விபத்தில் மரணமடைந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவிலுள்ள செல்சுரா பாலத்திற்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பாஜக எம்.எல்.ஏ விஜய் ரஹாங்க்தலே மகன் சவாங்கி மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து நள்ளிரவில் காரில் சென்றுள்ளார். செல்சுரா பாலத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்புசுவர்மீது மோதி கிட்டத்தட்ட 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற உதவி ஆய்வாளர் பாபாசாஹிப் தோரட் இதுகுறித்து விசாரணை நடத்தினார். அப்போது வாகனம் எதுவும் வராததும் மாணவர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால்தான் விபத்து ஏற்பட்டதாகவும், காரில் இருந்தவர்கள் அனைவரும் வெளியே வீசப்பட்டதால் காரை ஓட்டிச்சென்றது யார் என கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் தெரிவித்தார்.

’’மகாராஷ்டிராவில் செல்சுரா அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. இந்த சோக நேரத்தில், என் மனது தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’’ என பிரதமர் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.