water bottle
water bottle pt web
இந்தியா

அடேங்கப்பா..! 650ml தண்ணீர் பாட்டில் 350 ரூபாயா...! இணையத்தை கலக்கும் இளம்பெண்ணின் பதிவு

Angeshwar G

மக்கள் எப்போதும் நல்லவற்றிற்கு கூடுதலாக செலவு செய்ய தயங்காதவர்கள். அது உணவாக இருந்தாலும் உடைகளாக இருந்தாலும் பிற எந்த பொருட்களாக இருந்தாலும் தரம் மட்டுமே பிரதானமாக இருக்கும். ஆனால் பொருளின் தரத்திற்கு அல்லாமல் அதிகமாக விலை வைத்து விற்கும் போது அதை எதிர்க்கவும் தயங்காதவர்கள்.

மேலும் உலகமெங்கும் தண்ணீர் வியாபாரப் பொருளாகிவிட்டதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் பாட்டில்களில் குடிநீரை அடைத்து விற்பதற்கே பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் 650 மில்லி அளவு கொண்ட தண்ணீர் பாட்டில் ரூ.350 க்கு விற்ற சம்பவம் நடந்துள்ளது.

ரித்திகா போராஹ் என்ற பெண்மணி தனது ட்விட்டர் பதிவில் உயர்தர உணவகம் ஒன்றில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், “நீங்கள் நம்ப மாட்டீர்கள். உயர்தர உணவகத்திற்கு மதிய உணவிற்காக சென்ற போது தண்ணீர் பாட்டிலுக்கு 350 ரூபாயை கட்டணமாக விதித்தனர். எனவே நான் தண்ணீர் பாட்டிலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டேன். ஏனென்றால் அதை மீண்டும் உபயோகிக்கலாம். இந்நிகழ்வு எனக்கு மட்டும் தான் நடந்துள்ளதா அல்லது உங்களுக்கும் நிகழ்ந்துள்ளதா” என கேட்டுள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில் தண்ணீர் பாட்டிலின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அதில் அந்த தண்ணீர் பாட்டிலில் அதற்கான விலை ரூ.350 எனவும் தயாரிக்கப்பட்ட தேதி 18/05/2023 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாட்டிலின் கீழ் பகுதியில் நேட்சுரல் மினரல் வாட்டர் என்றும் himalayan kingdom of bhutanல் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவு இணையத்தில் வைரலானது. அந்த பெண்மணி ஜூலை 10 ஆம் தேதி இதை பதிவிட்டுள்ளார். தற்போது வரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டுள்ளனர். நான்காயிரத்திற்கும் அதிகமானோர் அதை லைக் செய்துள்ளனர். மேலும் பல இணையவாசிகள் தங்களது அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். அதில் அவர்கள் சாதாரண தண்ணீர் வேண்டுமா என கேட்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், வேறு உணவகம் ஒன்று தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.200 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.