65 சதவீத இட ஒதுக்கீடு
65 சதவீத இட ஒதுக்கீடு முகநூல்
இந்தியா

65 சதவீத இட ஒதுக்கீட்டை அரசிதழில் வெளியிட்ட பீகார் அரசு

ஜெனிட்டா ரோஸ்லின்

பீகார் மாநிலம் முன்னதாக 50 சதவீத இடஒதுக்கீட்டை பெற்றிருந்த நிலையில் தற்போது 65 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்ற மாநிலமாக மாறியுள்ளது. ஆளுநரின் ஒப்புதலை இம்மசோதா பெற்ற நிலையில், அம்மசோதாவிற்கான அரசிதழ் அறிவிப்பை அம்மாநில அரசு செவ்வாய் கிழமை அன்று வெளியிட்டது.

இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் சாதி கணக்கெடுப்பு அவசியம் என்று பல தரப்பு கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார் தலைமையில், சாதி வாரி கணக்கெடுப்பானது நடத்தப்பட்டு அக்டோபர் 2-ஆம் தேதி அதற்கான விவரங்களும் வெளியிடப்பட்டது.

சாதிவாரி அடிப்படையில் வெளிவந்த தரவுகளை கொண்டு கடந்த 9-ஆம் தேதி பீகார் மாநில சட்டசபையில், “பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியிலன,பழங்குடி வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்துவது அவசியம்.” என்று கூறி 50 சதவீத இடஒதுக்கீட்டை 65 சதவீத இடஒதுக்கீடாக மாற்றி உயர்த்த 2 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேலும் பொருளாதாரத்தில் நலிந்த உயர் சாதியினருக்கு மத்திய அரசு வழங்கும் 10 சதவீத இட ஒதுக்கீட்டையும் சேர்த்து ,மொத்தம் 75 சதவீத இடஒதுக்கீடாக உயர்த்தப்படும் என்று மாசோதாவானது தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில்,இம்மசோதா ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லோகரின் ஒப்புதலுக்காக காத்திருந்த நிலையில், சமீபத்தில் அதற்கான ஒப்புதலும் கிடைக்கவே இது தொடர்பான அரசிதழ் அறிவிப்பை அம்மாநில அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஒதுக்கீடு திருத்த மசோதாவை அரசியல் சட்டத்தின் 9-ஆவது அட்டவணையில் சேர்க்குமாறு மத்திய அரசுக்கு பீகார் அரசு வலியுறுத்தி வருகிறது.

9-ஆவது அட்டவணை:

அதாவது 1992-ஆம் உச்சநீதிமன்றத்தால் இடஒதுக்கீடு 50 சதவீதத்தினை தாண்டக்கூடாது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரை 69 சதவீத இடஒதுக்கீடு என்பது நடைமுறையில் உள்ள ஒன்று.

ஏனென்றால் அரசியல் சட்டத்தின் 9-ஆவது அட்டவணையில் தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு மசோதாவானது இடம்பெற்றிருப்பதுதான். எனவே தமிழ்நாட்டைபோல நீதிமன்ற விசாரனையில் இருந்து விலக்கு பெற அரசியல் சட்டத்தின் 9 ஆவது அட்டவணையில் பீகாரின் 65 சதவீத இடஒதுக்கீட்டை சேர்க்குமாறு மத்திய அரசுக்கு பீகார் மாநில அரசு தொடர் வலியுறுத்தலை முன்னிலைப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.