இந்தியா

உ.பி: கர்ப்பிணி பெண் கொடூர கொலை; தாயின் உடலுடன் இரவு முழுதும் தனியாக தவித்த 6 வயது குழந்தை

JustinDurai
26 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது 6 வயது மகள் கண்முன்னே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் பரேலி நகரில் உள்ள சுபாஷ் நகர் பகுதியில் வினிதா என்கிற கர்ப்பிணிப் பெண் (26 வயது), தனது கணவர், 6 வயது மகள், மாமியாருடன் வசித்து வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அன்று கர்ப்பிணியின் கணவர் வெளியூர் சென்றிருந்தார். செவிலியராக இருக்கும் அவரது மாமியார் அன்றிரவு பணிக்கு சென்றுவிட்டார். இதனால் தனது 6 வயதான பெண் குழந்தையுடன் வினிதா இரவில் தனியாக இருந்துள்ளார்.
காலையில் வினிதாவின் மாமியார் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்க்கையில், வினிதா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். வினிதாவின் மகள் தாயின் உடல் அருகிலேயே செய்வதறியாது திகைத்து உட்கார்ந்திருப்பதை கண்டார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கொலை நடந்த இடத்தில் வினிதாவின் 6 வயது பெண் குழந்தை மட்டும் இருந்ததால், அந்த குழந்தையிடம் பேசி போலீசார் தகவல் சேகரித்தனர். குழந்தை தெரிவித்த தகவலின்படி, இரவு அன்று வினிதாவின் உறவினர் ஆகாஷ் குமார் என்பவர் வீட்டிற்கு நுழைந்து வினிதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த ஆகாஷ் குமார், அம்மிக்கல்லை போட்டு வினிதாவை கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டார் என குழந்தை கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து தப்பியோடிய ஆகாஷ் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.