jammu kashmir x page
இந்தியா

ஜம்மு காஷ்மீர் | சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.. ஒருவர் பலி.. 6 பேர் காயம்!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் இன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஒரு சுற்றுலாப் பயணி கொல்லப்பட்டார். மேலும் ஆறு பேர் காயமடைந்தனர்.

Prakash J

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலாத் தலத்திற்குப் பெயர் பெற்றது. இங்குள்ள காடுகள், ஏரிகள் மற்றும் பரந்த புல்வெளிகள் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகிறது. இங்கு, ஒவ்வோர் ஆண்டும் கோடையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு பெரும்பாலும் நடந்துசென்றோ அல்லது குதிரையில் சென்றோதான் பார்வையிட முடியும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அப்பகுதியில் ராணுவ வீரர்கள்போல சீருடை அணிந்து வந்த பயங்கரவாதிகள், சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில், ஒரு சுற்றுலாப் பயணி கொல்லப்பட்டதாகவும், ஆறு பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியை சுற்றி வளைத்துள்ள பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, சவூதி அரேபியா சென்றுள்ள பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தொலைபேசி உரையாடலில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தாக்குதல் நடந்த இடத்தைப் பார்வையிட்டு அனைத்து பொருத்தமான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு தொலைபேசி வாயிலாகக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள தனது வீட்டில் அமித் ஷா ஓர் அவரச கூட்டத்தை கூட்டி, ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர் விரைவில் ஸ்ரீநகர் செல்வார் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே இந்த சம்பவத்தை மாநில அரசும், கட்சிகளும் கண்டித்துள்ளன. ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, ”தாக்குதலை நடத்தியவர்கள் விலங்குகள், மனிதாபிமானமற்றவர்கள். சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்களை நோக்கி நடத்தப்பட்ட எந்த தாக்குதலையும்விட இந்தத் தாக்குதல் மிகப் பெரியது என்பதைச் சொல்லத் தேவையில்லை” என தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவர் மெஹபூபா முப்தி "இதுபோன்ற வன்முறை ஏற்றுக்கொள்ள முடியாதது, கண்டிக்கப்பட வேண்டும். வரலாற்றுரீதியாக, காஷ்மீர் சுற்றுலாப் பயணிகளை அன்புடன் வரவேற்றுள்ளது. இந்த அரிய சம்பவத்தை மிகவும் கவலைக்குரியதாக ஆக்குகிறது. பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது மிக முக்கியமானது, மேலும் எதிர்கால தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் உயிரிழந்தோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என காஷ்மீர் காவல்துறை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயங்கரவாதிகள் மிகவும் அருகிலிருந்து சுட்டதால், காயமடைந்த பல சுற்றுலாப் பயணிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. பெகல்காம் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் பகுதி என்பதால், குறிவைத்து சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் படுகொலை செய்திருப்பது தெளிவாகிறது.

அமித் ஷா

அப்பாவி சுற்றுலா பயணிகள் என நன்றாக தெரிந்து பயங்கரவாதிகள் அவர்களை சுட்டுள்ளனர். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் தூண்டுதல் அடிப்படையிலேயே படுகொலை நடந்திருப்பதாக அதிகாரிகள் கருகின்றனர். படுகொலையை நேரில் கண்ட சுற்றுலா பயணிகள் பயங்கரவாதிகள் மதம் என்ன என கேட்டு பின்பு சுட்டதாகவும் தகவல் அளித்துள்ளனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவே காஷ்மீர் சென்றடைகிறார். தொடர்ச்சியாக பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.