ஜம்முவில் வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் முன்னாள் டிஎஸ்பி உட்பட 6 பேர் பரிதாபமாக மரணமடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் உள்ள வாடகை வீட்டில் தனது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார் முன்னாள் துணைக்காவல் கண்காணிப்பாளரான 81 வயதான முஅவதார் கிரிஷன் ரெய்னா.
இவரது வீட்டில் கடந்த புதன்கிழமை அதிகாலை 2.30 மணி அளவில், தீ விபத்து ஏற்பட்டு பற்றி எரிவதை அக்கம் பக்கத்தினர் கவனித்துள்ளனர். இதனையடுத்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த தீ விபத்தால், வீடு முழுவதும் கரும்புகை நிரம்ப, அவ்வீட்டில் இருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மீட்புப்படையினர் அவ்விடத்திற்கு விரைந்து அவர்களை மீட்டு, கதுவாவில் இருந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளனர். ஆனால், வரும் வழியிலேயே இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேருமே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் எஸ்பி அவதார் ரைனா, அவரது மகள் பர்கா ரைனா, மகன் தாகாஷ், கங்கா பகத், 15 வயது தானிஷ் பகத், 6 வயது அத்விக் ஆகிய 6 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் அவதார் ரைனாவின் மனைவி ஸ்வர்ணா (61), நீத்து தேவி (40), அருண் குமார் (15) மற்றும் 69 வயது பெண் ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இவர்களது இறப்பிற்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், "கதுவா நகரின் ஷிவ் நகர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தின் விளைவாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்செயலாக இறந்ததைப் பற்றி அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன்.
காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பில் இருந்து வருகிறேன். பாஜக மண்டல தலைவர் ராகுல் தலைமையிலான கட்சித் தொண்டர்கள் அங்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.
வீட்டின் அருகில் இருந்த மாணவர் ஒருவர் தெரிவிக்கையில், “டிராயிங் அறைக்குள் தீ பரவியது, மற்ற அறைகளுக்குள் பரவிய புகை மரணத்திற்கு வழிவகுத்தது"
இதுக்குறித்து மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் சுரிந்தர் அத்ரி தெரிவிக்கையில், “ இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். சம்பவம் அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 3 மணி வரை நடந்திருக்கிறது. இறந்தவர்கள் தீக்காயத்தைவிட புகை மூட்டத்தாலும், மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாக தெரிகிறது. ”என்று தெரிவித்துள்ளார்.