செய்தியாளர்: ஜெகன்நாத்
கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர், குண்டுலுபேட்டின், ஷெட்டிஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் ஆனந்த். இவரது மனைவி சுபா. 6 மாதங்களுக்கு முன்புதான் சுபாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு காது குத்தும் நிகழ்ச்சிக்கு தம்பதியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
காது குத்தும்போது, குழந்தைக்கு வலி தெரியாமல் இருக்கும் நோக்கில், பொம்மலாபுரா ஆரம்ப சுகாதார மையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்த மருத்துவர் நாகராஜு, குழந்தையின் இரண்டு காதுகளிலும், அனஸ்தீஷியா மயக்க மருந்து ஊசி போட்டுள்ளார். அதற்கு 200 ரூபாய் கட்டணமும் பெற்றுக் கொண்டுள்ளார்.
குழந்தைக்கு ஊசி போட்ட நிலையில், அனஸ்தீஷியா அதிக வீரியம் கொண்டதாக இருந்ததால், குழந்தையின் வாயில் நுரை வந்துள்ளது. இதனால் உடனடியாக தாலுகா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளனர்.
பெற்றோரும் குழந்தையை அங்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் பொம்மலாபுரா ஆரம்ப சுகாதார மையத்திலேயே இறந்து விட்டதாக கூறினர். ஆத்திரமடைந்த பெற்றோர், ஆரம்ப சுகாதார மைய மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி சுகாதாரத் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.