இந்தியா

10ஆவது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

webteam

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 10ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும என வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய பிரதிநிதிகளுடன் ஏற்கனவே 4 கட்டமாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதில் சுமூக உடன்பாடு எட்டப்படாதநிலையில், இன்று அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய கிசான் அமைப்பின் பொதுச் செயலாளர் லகோவல், வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக கூறினார். வரும் 8ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே டெல்லி எல்லையில் குவிந்துள்ள விவசாயிகளால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாகவும், ஆகவே அவர்களை உடனே அப்புறப்படுத்துமாறு உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.