அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ள ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமியர்கள் உள்பட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்துள்ளனர்
ஸ்ரீநகரில் ராணுவ பயிற்சி பெற்ற 575 இளைஞர்கள், பனா சிங் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவில் கம்பீரமாக நடைபோட்டு வந்த காட்சி அங்கு திருண்டிருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இந்த விழாவில் ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர், ராணுவ அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து பேசிய பயிற்சி முடித்த ராணுவ வீரரான யாஷிர் அஹமது, ''என்னுடைய அப்பா ராணுவத்தில் இருந்தார். நான் அவரை பார்த்தும் அவருடைய சீருடையை பார்த்தும் வியந்துள்ளேன். ராணுவம் நம்மை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தயார்படுத்துகிறது'' என தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த மாதம் 6ஆம் தேதி ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை மறுசீரமைப்பு செய்தது. இதனைத் தொடர்ந்து அங்கு மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது. அத்துடன் காஷ்மீர் பகுதியில் இணையதள சேவையும் துண்டிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக அங்கு சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.