புதுப்பிக்கப்பட்ட அக்குலம்-கொல்லம் நீர்வழிப்பாதையை கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று தொடங்கி வைத்தார். சுற்றுலாத்துறைக்காக கொச்சி விமான நிலையத்தால் வாங்கப்பட்ட 24 இருக்கைகள் கொண்ட சூரிய சக்தியில் இயங்கும் சஃபாரி படகை மக்கள் பயணத்திற்கு அர்ப்பணித்தார்.
இந்த திட்டம் எல்.டி.எஃப் அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தின் ஒரு பகுதியாகும். மேற்கு கடற்கரை கால்வாயின் கோவளம் முதல் காசர்கோடு மாவட்டத்தில் நீலேஷ்வர் வரை இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மேற்கு கடற்கரை கால்வாய் வழியாக இந்த பயணம் செல்வது சுற்றுலாவுக்கு ஒரு உற்சாகத்தை அளிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட ட்வீட்டில் “520 கி.மீ நீளமுள்ள தேசிய நீர்வழிகளின் முதல் கட்டம் தேசத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு இணக்கமான இப்போக்குவரத்தின் தொடக்கமானது உள்கட்டமைப்பு வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில், போக்குவரத்து துறைகளில் இந்த அரசு ஒரு மிகப்பெரிய பாய்ச்சலை மேற்கொண்டுள்ளது” என தெரிவித்தார்.