இந்தியா

இறந்தது தெரியாமலேயே அம்மாவுடன் தூங்கிய மகன்: மனதை உருக்கிய சம்பவம்!

webteam

அம்மா இறந்தது தெரியாமலேயே அவளுடன் மகன் தூங்கிய நெகிழ்ச்சிச் சம்பவம்  ஐதராபாத்தில் நடந்துள்ளது.

ஐதராபாத்தில் உள்ள கடேடன் பகுதியைச் சேர்ந்தவர் சமீனா சுல்தானா. வயது 36. இவர் கணவர் அயூப். இவர்கள் மகன் சோயிப். வயது 6. கடந்த 6 வருடத்துக்கு முன் மனைவியையும் குழந்தையையும் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார் அயூப். இதையடுத்து மகனுடன் வசித்து வந்தார் சுல்தானா. நேற்று மாலை அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மகன் சோயிப்புடன் ஓஸ்மானியா அரசு பொது மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்துவிட்டது. இது தெரியாமல் அவரது அருகிலேயே தூங்கிவிட்டான் சோயிப். பிறகு டாக்டர்கள் சுல்தானாவை பரிசோதித்துப் பார்த்துவிட்டு அவர் இறந்துவிட்டதை உறுதி செய்தனர். ஆனால் சோயிப், அம்மாவை பிரிய மறுத்துவிட்டான். 

உடற்கூறு ஆய்வுக்கு சுல்தானா உடலை எடுத்துச் செல்ல முயன்றபோது சோயிப் விடவில்லை. நானும் வருவேன் என்று அடம்பிடித்து அழுதுள்ளான். இது அங்குள்ளவர்களை கண் கலங்க வைத்தது.

பிறகு மருத்துவமனையில் இருந்தவர்கள் அவனுக்குச் சமாதானம் கூறி, அம்மா இறந்துவிட்டார் என்றனர். இருந்தும் அவன் அம்மாவை விடவில்லை. உறவினர்கள் வந்ததும் அவனை அவர்களிடம் சேர்த்தனர். பிறகு சுல்தானாவின் உடலை எடுத்துச் சென்றனர்.