இந்தியா

உ.பி: இடிந்துவிழுந்த அரசு கழிவறை கட்டடம்.. இடிபாடுகளில் புதைந்து 5 வயது சிறுவன் உயிரிழப்பு

Sinekadhara

அரசு கழிவறை கட்டடம் இடிந்துவிழுந்ததில் 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மகல்காஞ்ச் பகுதியிலுள்ள சபர்தலா கிராமத்தில் அரசு கழிவறை திட்டத்தின்கீழ் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. சனிக்கிழமை மதியம் 12 மணியளவில் தனது வீட்டின்முன்பு கழிவறை இருக்கும் இடத்திற்கு அருகில் பங்கஜ் என்ற 5 வயது சிறுவன் விளையாடியுள்ளான். அப்போது திடீரென கழிவறை கட்டடம் சரிந்துவிழுந்திருக்கிறது. இதில் இடிபாடுகளில் சிக்கிய புதைந்துபோன சிறுவன் பங்கஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.

2016ஆம் ஆண்டு அந்த கிராமத்தில் கழிவறைகள் கட்டப்பட்டதாகவும், கிராம தலைவரும், செயலாளரும் தரமற்ற பொருட்களை பயன்படுத்தி கட்டியதாலேயே கழிவறை இடிந்துவிழுந்ததாகவும், மோசமான கட்டடத்தால்தான் தங்களுடைய மகன் உயிரிழந்ததாகவும் சிறுவனின் குடும்பத்தார் குற்றஞ்சாட்டியுள்ளனர். சிறுவனின் உடலானது உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், எனினும், இதுகுறித்து இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.